பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் பெரம்பர் செம்பியம் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் ஆதரவாளர்களுடன் பேசி கொண்டிருந்த போது, 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க, நா.த.கட்சி, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க அரசின் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், "பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தலைநகர் சென்னையில் அதுவும் முதலமைச்சர் ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக உள்ள கொளத்தூர் அருகே ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கி இருக்கிறது. காவல்துறையினர் முழுக்க முழுக்க திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுகவின் வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை காவல்துறைக்கு உத்தரவிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கும் இதுதான் காரணம். தலைநகர் சென்னையில் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். திரு ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் சென்னை மாநகர மக்கள் குறிப்பாக வடசென்னை மக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்துள்ளனர்.
திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தான் ஒரு மாநில அரசின் முதல் கடமை அந்த கடமையிலிருந்து திமுக தவறியிருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“