தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆம்ஸ்டாராங்கின் மனைவி பொற்கொடிக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது பொற்கொடி தனது ஆதரவாளர்களை திரட்டி மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கட்சியின் மேலிட பிரதிநிதிகளுடம் புகார் அளித்தார். இதற்கு பிறகு, பொற்கொடியை, தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள், மேலிடப் பிரதிநிதிகளிடம் மனு வழங்கி கோஷமிட்டிருந்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை பகுஜன் சமாஜ் கட்சி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. பொற்கொடி இனி கட்சி பணிகளில் ஈடுபட மாட்டார் என பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே இனி கவனித்து கொள்வார், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையில் மட்டுமேபொற்கொடி இனிமேல் கவனத்தை செலுத்துவார் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பொற்கொடி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே கட்சிக்குள் உட்கட்சி பூசல் தலைதூக்கி வரும் நிலையில், பொற்கொடி குறித்த இந்த அறிவிப்பு, எத்தகைய மாற்றத்தை கட்சிக்குள் ஏற்படுத்தும் என தெரியவில்லை.