2 கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரகூடிய கைது வாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றாரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். இதற்காக இரண்டு காசோலை கொடுத்தனர். மேலும் 50 லட்சம் ரூபாய் ரொக்கமாக இருவரும் பெற்றுள்ளனர். இதற்காக 5 காசோலை என மொத்தம் 7 காசோலைகளை அளித்தனர்.
ஆனால் வாங்கிய பணத்தை திருப்பி அளிக்காததால் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சரத்குமார், மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இருவரின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை 3 ஆவது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கு சைதாப்பேட்டை 3வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகவில்லை. எனவே இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர கூடிய கைது வாரண்ட பிறப்பித்த நீதிபதி வழக்கு விசாரணை ஜூலை 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டர்.