ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் பிப்.28ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக இதுவரை பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. 4வது முறையாக கடந்த பிப்ரவரி 19ம் தேதி மீண்டும் ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர் செல்வம் அப்போதும் ஆஜராகவில்லை.
இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் அளித்து சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது.
இந்தச் சூழ்நிலையில், பிப்ரவரி 28ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஐந்தாவது முறையாக இன்றும் சம்மன் அனுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்த போது, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைத்து மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்தவர் ஓ.பன்னீர் செல்வம். அதன்பின்னரே, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆனால், ஆணையம் அமைக்கச் சொன்ன ஓ.பி.எஸ் இதுவரை ஒருமுறை கூட, விசாரணைக்கு ஆஜரானதில்லை. இம்முறையாவது அவர் ஆஜராகி, விசாரணை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.