ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தூத்துக்குடியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டம் நேற்று 100வது நாளை எட்டியது. இதனால், போராட்டக்காரர்கள் பேரணி நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால், போலீசார் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. தவிர 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர். இருப்பினும் தடை உத்தரவையும் மீறி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டதால் அவர்களை சமாளிக்க முடியாமல் காவல்துறை பின்வாங்கியது.
இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சூறையாடினர். மேலும், அங்கிருந்த வாகனங்களுக்குப் பொதுமக்கள் தீவைத்தனர். இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சில சமூக அமைப்புகள் தான் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இந்த விசாரணையை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 2009ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 2015ல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.