அருப்புக்கோட்டையில் தன் 11 வயது மகனை இழந்த வேதனையிலும், பிற உயிர்கள் வாழ வேண்டும் என்பதே இலட்சியமாக எடுத்துச் செயல்பட்ட ஒரு பெற்றோர், நெகிழவைக்கும் உதாரணமாக திகழ்கிறார்கள்.
சிதம்பராபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும், அரசுப்பள்ளி ஆசிரியருமான சரவணனின் மகன் சபரீசன் (11), விடுமுறைக்காக உறவினருடன் சென்ற போது, சாயல்குடி சாலை அருகே நடந்த சாலை விபத்தில் கவிழ்ந்தார். மே 14ஆம் தேதி நடந்த இந்த விபத்தில், அவர்களது டூவீலர் மீது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி, சபரீசன் உட்பட நால்வரும் தூக்கி வீசப்பட்டனர்.
அதில், கார்த்திகா (35), பவதாரிணி (8) ஆகியோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், சபரீசன் மற்றும் அவரது தந்தை சரவணன் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். சபரீசன் மே 16ஆம் தேதி காலை 6:41 மணியளவில் மூளைச்சாவு அடைந்தார்.
தன் மகனின் மரணத்திலும் மனிதநேயம் மாறாத அப்பா சரவணன், மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தார். இதன் மூலம், சபரீசனின் கல்லீரல் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நோயாளிக்கு, சிறுநீரகங்கள் இரண்டும் மதுரை மற்றும் அப்போலோ மருத்துவமனை நோயாளிகளுக்காகவும், இரண்டு கண்கள் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.
முதன்முறையாக 11 வயது சிறுவனிடம் இருந்து உறுப்புகள் பெறப்பட்டு, ஐந்து பேருக்கு உயிர் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் ஐந்தாவது உறுப்புத் தானமாகும் என டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார்.
உறுப்பு தான முடிவுக்கு பாராட்டாக, சிறுவனின் தந்தை சரவணனுக்கு, மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.