scorecardresearch

தமிழக கோவிலில் அசாம் பெண் யானை மீண்டும் தாக்கப்பட்டதா? பீட்டா குற்றச்சாட்டும்; தமிழக அரசின் பதிலும்

தமிழகத்தில் ஜெய்மால்யாதா என்று அழைக்கப்படும் ஜாய்மலா, 2008 ஆம் ஆண்டு அசாமில் இருந்து தமிழ்நாட்டிற்கு, ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், அழைத்துச் செல்லப்பட்டது, இருப்பினும் இன்னும் அது தனது சொந்த மாநிலத்திற்குத் திரும்பவில்லை.

PETA
Assam elephant ‘mistreated again’ in Tamil Nadu temple: PETA

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயது பெண் யானைக் குட்டி ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமால்யதா என்று பெயர் சூட்டப்பட்டு கோயில் மண்டபத்தில் வைத்து வளர்க்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் இருந்தபோது இந்த யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து, பாகன்கள் இருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதையடுத்து, புதிய பாகன்கள் இருவர் நியமிக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.10 லட்சம் செலவில் யானைக்காக கிருஷ்ணன்கோயில் தனியார் மண்டபத்தில், நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு ஷவர்கள் அமைக்கப்பட்டு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த யானை தாக்கப்படுவதாக மீண்டும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு விலங்கு உரிமை ஆர்வலர் குழு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

பீட்டா இந்தியா அமைப்பு, செப்டம்பர் மாதம் தமிழக அரசால் வெளியிடப்பட்ட வீடியோவில் பெண் யானை வெளியில் செல்வதையும், சங்கிலியின்றி நடப்பதையும் காட்டும் வீடியோ “உண்மையல்ல” என்று கூறியது. மேலும் அது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில் யானைக்காக கட்டப்பட்ட குட்டை தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதையும், யானையின் கால்களில் காயங்கள் இருப்பதையும் காட்டுகிறது.

இதுகுறித்து கவுஹாத்தியில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய PETA இந்தியாவின் பிரச்சார மேலாளர் ராதிகா சூர்யவன்ஷி, அக்டோபர் 20 முதல் நவம்பர் 13 வரை ஜாய்மாலாவின் தினசரி வழக்கத்தை நாங்கள் அவ்வப்போது கண்காணித்து வருகிறோம், அது ஒரு கொட்டகைக்குள் கான்கிரீட் தரையில் சங்கிலியில் இருப்பதைக் கண்டறிந்தோம் என்று கூறினார்.

இருப்பினும், யானை முற்றிலும் நலமாக உள்ளது என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜே.குமரகுருபரன் தெரிவித்தார்.

அவள் குளித்துக் கொண்டிருக்கிறாள், அவளுக்கு நல்ல பாகன் கொடுக்கப்பட்டுள்ளது. யானையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏற்கனவே நமது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளோம். அதை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.

இது பழைய வீடியோ, இதுதான் இப்போது மீண்டும் வெளிவருகிறது என்று கூறிய குமரகுருபரன், “தீங்கிழைக்கும் வகையில் தோன்றும்” பீட்டாவின் நோக்கம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். தமிழகத்தில் உள்ள யானைகள் மற்றும் கோவில்களை குறிவைத்து மீண்டும் மீண்டும் அதே வீடியோ வெளியாகி வருகிறது. தொடர்ந்து அவதூறு செய்தால், சட்டப்படி அவர்களை கையாள்வோம்,  என்றார்.

அசாமில் உள்ள மூத்த வனத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜாய்மாலா மாநிலம் திரும்புவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

ஆனால், இந்த விவகாரம் நீதிமன்றம் விசாரணையில் இருப்பதால் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தமிழகத்தில் ஜெய்மால்யாதா என்று அழைக்கப்படும் ஜாய்மலா, 2008 ஆம் ஆண்டு அசாமில் இருந்து தமிழ்நாட்டிற்கு, ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில், அழைத்துச் செல்லப்பட்டது, இருப்பினும் இன்னும் அது தனது சொந்த மாநிலத்திற்குத் திரும்பவில்லை.

இதனிடையே யானையின் உடல்நிலையை ஆய்வு செய்து, மாநிலத்திற்குத் திரும்ப வழிவகை செய்ய, யானை நிபுணர்கள் மற்றும் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவை அசாம் அரசு அனுப்பியிருந்தது, ஆனால் தமிழக அரசு, தூதுக்குழு யானையை சந்திக்க அனுமதி மறுத்தது.

இதனிடையே, வடகிழக்கு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளை ஆய்வு செய்ய அசாம் அரசுக்கு கவுஹாத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.

ஜாய்மாலாவை இப்போது வைத்திருக்கும் பகுதிக்குள் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று சூர்யவன்ஷி கூறினார், இது அவளை தனிமையில் வைத்திருக்கவும் அவளது துஷ்பிரயோகத்தை மறைத்து வைத்திருப்பதாகவும் தோன்றுகிறது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட யானைகளைக் கையாள்வதில் திறமைகள் தேவைப்படுவதால், ஜாய்மாலாவை விடுவிக்கவும், சிறப்பு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்யவும் தென் மாநிலத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு அசாம் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.

உத்தியோகபூர்வ பதிவுகளின்படி, அசாமில் இருந்து ஒன்பது யானைகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு கோவில்களில் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Assam elephant joymala jeymalyatha peta tamil nadu