மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நேற்று நடந்த ஓர் எதிர்பாராத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தாமதத்தால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்து, ஓட்டுநர் கணேசனை தனது செருப்பால் தாக்கிய சம்பவம் வெளியாகியுள்ளது.
பக்ரீத் பண்டிகை விடுமுறையையடுத்து சொந்த ஊர்களிலிருந்து திரும்பிய ஏராளமானோர் பஸ் நிலையத்தில் குவிந்திருந்தனர். அந்த நேரத்தில், ஒரு அரசு பஸ் ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது.
ஆனால், பஸ் நிலையத்துக்குள் நுழைந்து இயக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அதைப் பற்றிக் கேட்க டிரைவரை அணுகினர். டிரைவர், மேலாளர் கூறினால்தான் பஸ்சை இயக்க முடியுமென தெரிவித்ததாக கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/09/m5YKt5IOhcdeGaQksfkM.jpg)
பின்னர், நேரடியாக உதவி மேலாளரிடம் பயணிகள் கேட்டபோது, அவர் கூறிய முறையான பேச்சு பயணிகளில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. “முன்பதிவு செய்தீர்களா?” என கேள்வி எழுப்பியதோடு, “இப்படி பேசினால் நீங்கள் செல்லவே முடியாது” என கூறி, சிலரை இழிவுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பயணிகள் மற்றும் மேலாளர் இடையே வாக்குவாதம் தீவிரமானது.
வாக்குவாதத்தின் போதே டிரைவர் கணேசனை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்ற உதவி மேலாளர் மாரிமுத்து, திடீரென தனது செருப்பால் அவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பஸ் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.