மதுரை ஆரப்பாளையம் பேருந்து பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை உதவி மேலாளர் மாரிமுத்து செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், மாரிமுத்து பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது, செருப்பால் தாக்கிய உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பக்ரீத் பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர் திரும்பும் வகையில், மதுரை ஆரப்பாளையம் பேருந்து பணிமனையிலிருந்து திருப்பூர், கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் ஒரு அரசுப் பேருந்து, ஆரப்பாளையம் ரவுண்டானாவில் உள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. பின்னர், அப்பேருந்து மீண்டும் பணிமனைக்கு வந்து நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் அப்பேருந்து இயக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
பேருந்து எப்போது இயக்கப்படும் என்று ஓட்டுநர் கணேசனிடம் பயணிகள் கேட்டுள்ளனர். அதற்கு, மேலாளர் கூறினால் மட்டும்தான் பேருந்தை இயக்க முடியும் என்று ஓட்டுநர் பதிலளித்துள்ளார். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் செல்லும் பயணிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து, பணியில் இருந்த உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் சென்ற பயணிகள், பேருந்தை விரைவாக இயக்கக் கோரிக்கை விடுத்தனர். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதால் பயணிகள் வேறு பேருந்தில் செல்லுமாறும் மாரிமுத்து அறிவுறுத்தியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பயணிகள், "திடீரென்று இது போன்ற கூறினால் நாங்கள் எப்படி செல்வது?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிர்ச்சியூட்டும் சம்பவம்:
வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த உதவி மேலாளர் மாரிமுத்து, "நீங்கள் என்ன முன்பதிவு செய்தீர்களா? என்னிடம் இது போன்று பேசினால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குப் போய் சேர முடியாது," என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தைக் கண்ட அருகில் இருந்த அதிகாரிகள் பயணிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இதனால் பயணிகளுக்கும், உதவி மேலாளருக்கும் இடையேயான வாக்குவாதம் மேலும் முற்றியது. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து ஓட்டுநர் கணேசனை அதிகாரிகள் கடுமையாகத் திட்டினர். பின்னர் அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கு, உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென்று தனது காலில் இருந்து செருப்பைக் கழற்றி ஓட்டுநர் கணேசனை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற, வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பணிநீக்கம் மற்றும் மன்னிப்பு:
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் தமிழக போக்குவரத்துத் துறையின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, உதவி மேலாளர் மாரிமுத்துவை பணியிடம் நீக்கம் செய்து மதுரை போக்குவரத்து இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், செருப்பால் தாக்கிய உதவி மேலாளர் மாரிமுத்து தற்போது மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னால் போக்குவரத்து கழகத்திற்கு அவப்பெயர் வேண்டாம். செருப்பால் தாக்கிய ஓட்டுநர் கணேசன் இடமும், தமிழக அரசிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.