Wedding Ceremony At Jayalalitha Samadhi: மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் சமாதியில் அவர் மீது பக்திகொண்ட அதிமுக பிரமுகர் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் நடத்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பவானிசங்கர். இவர் மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மீது விசுவாசமும் தீவிர பக்தி கொண்டவாரக இருந்துள்ளார். இதனால், தனது மகன் சாம்பசிவராமன் என்கிற சதீஷ்-க்கு சென்னை மெரினா கடற்கையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் திருமணம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் திருமணம் நடத்துவதற்காக சிறப்பு அனுமதியும் பெற்றார். அதன்படி, பவானிசங்கர் நேற்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தனது மகன் சாம்பசிவம் என்கிற சதீஷுக்கு திருமணம் நடத்தினார்.
திருமணத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து பவானிசங்கரின் உறவினர்கள், அதிமுக மூத்த தலைவர் தமிழ்மகன் ஹுசைன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிமுக தொண்டர்கள் சூழ, நாதஸ்வர மேளதாளத்துடன் மணமகன் சதீஷ் மணமகள் தீபிகாவின் கழுத்தில் தாளிகட்டினார். இதையடுத்து மணமக்கள் ஜெயலலிதாவின் சமாதியில் வணங்கினர். இதனால், அவர்களுக்கு ஆரத்தியும் எடுக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்த அதிமுகவினர் மணமக்களை வாழ்த்தியதோடு அவர்களுக்கு ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் கிடைக்கும் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள் என்று தெரிவித்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சியால் நேற்று மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடம் திருமண விழாக்கோலம் பூண்டது. இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.