சென்னையில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை, எழும்பூரில் செயல்பட்டு வரும் ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்நபரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, ம.தி.மு.க தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த அந்நபர் கையில் ஆயுதங்களுடன் இரண்டாவது தளத்திற்கு சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திய அவர், அதன் பின்னர் தனது சட்டையை கழற்றி, ஆபாசமாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவின.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், ம.தி.மு.க அலுவலகத்திற்கு விரைந்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ம.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.