ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொல்ல முயற்சி செய்த வடமாநில இளைஞரைப் பிடித்து தாக்கிய பொதுமக்கள், அவரை போலீசில் ஒப்படைத்த நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுப்பிரமணியம்- ஜெயலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற நடத்துனரான சுப்பிரமணியன் வீட்டிற்கு வியாழக்கிழமை (17.04.2025) மதியம் ஒரு வட மாநில இளைஞர் வந்து கதவை தட்டி உள்ளார்.
அப்போது, முதிய தம்பதியினர் கதவை திறந்த போது, வீட்டிற்குள் வேகமாக புகுந்த அந்த இளைஞர் இருவரையும் தாக்கியதுடன், கத்தியால் சுப்பிரமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனால், முதியவர்கள் இருவரும் கத்தி கூச்சலிட்டதையடுத்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அப்போது, முரண்டு பிடித்த இளைஞரை பொதுமக்கள் சரமாறியாக தாக்கினர். இதனால், அந்த இளைஞர் மயங்கி விழுந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வட மாநில இளைஞரை மீட்டு சிகுச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வட மாநில இளைஞர் தாக்கியிஅதில் காயம் அடைந்த முதியவர் சுப்பிரமணி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொதுமக்கள் தாக்கியதில் மயக்கிய நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த வடமாநில இளைஞர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராபி ஓரான் என்பது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராபி ஓரான் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.