இந்தியாவில் தற்போது பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், குற்றங்கள் குறைந்த பாடில்லை. இதனால் வெளியில் செல்லும் பெண்கள் பெரும் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்தில் நேற்று இளம் பெண் ஒருவர் தான் ஒரு வாலிபரை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் அந்த பெண் பெயர் கவுதமி என்றும், அவர் சோழவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட அல்லிமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.
தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று இந்த பெண் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அவரது உறவுக்காரரின் மகனான அஜித் என்ற வாலிபர் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். மது போதையில் இருந்த அஜித் ஒரு குறிப்பிட்ட இடம் வந்த உடன் திடீரென கவுதமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கவுதமி அஜித்தின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் கத்தியை காட்டி மிரட்டி பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அவரது பிடியில் இருந்து தப்பிக்க போராடிய கவுதமி ஒரு கட்டத்தில், அஜித்தின் கத்தியை பிடுங்கி கண் இமைக்கும் நேரத்தில் அவரை சராமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கொலை செய்த குற்ற உணர்ச்சியில் சோழவரம் காவல்நிலையம் சென்ற கவுதமி தான் கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.
தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து அந்த இளம்பெண் மீது ஐபிசியின் பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் சோழவரம் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொலை தற்காப்பிற்காக நடத்தப்பட்டது என்று கூறி, மாவட்ட காவல்துறை அதிகாரி அரவிந்தன் ஐ.பி.எஸ். கொலை செய்த அந்த பெண்ணை விடுதலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடாபாக காவல்துறை அதிகாரி அரவிந்தன் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் வைலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"