தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில், ஆட்சியர் சமீரன் முன்னிலையில் குழு உறுப்பினர்கள் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி ஹோப் காலேஜ் தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டனர். பின்னர் சவரிபாளையம்பிரிவு அத்வைத் நூற்பாலை, உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பொள்ளாச்சி சாலை சிட்கோ, தமிழ்நாடு பஞ்சாலை கழகம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி, காற்றாலை நிலையம், பச்சாபாளையம் சிறுவாணி சாலையில் உள்ள ஆவின், (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நிறுவனம்),புதிய துணை மின்நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சுங்கம் பணிமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து குழுவினர் பணிமனையில் பேருந்துகள் தூய்மை செய்யப்படுவதை பார்வையிட்டனர். சுகாதாரமாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு செல்கிறதா என்பதை ஆய்வு செய்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவர் ராஜா, “கோவை போக்குவரத்து பணிமனையில் எத்தனை பேருந்துகள் வருகின்றன? எப்படி சுகாதாரமாக உள்ளது. சர்வீஸ் எப்படி உள்ளது. சர்வீஸ் செய்ய போதுமான வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தோம்.
இந்த சுங்கம் பணிமனைக்கு 72 வாகனங்கள் வந்து செல்கின்றன. கோவை மாநகரில் உள்ள 7சி பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் பேருந்துகளை நிறுத்த வாய்ப்பு இல்லை. இந்த விவகாரத்தை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பார்வைக்கு எடுத்துச் செல்கிறோம்.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு இலவச பேருந்தை நமது அரசு கொடுத்துள்ளது. அரசாங்கத்தின் நோக்கம் அரசு பேருந்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
சிலர் இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil