கோவை காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயலிங்க ராஜா என்பவர், தனது ஆட்டோவை அதே பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த ஆட்டோவை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயலிங்க ராஜா கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, E3 சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகர் தலைமையில், உதவி ஆய்வாளர் பாலசதீஷ் கண்ணன், தலைமை காவலர்கள் பிரபாகரன், செந்தில்குமார், கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஆட்டோவை திருடிச் சென்ற நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், ஆட்டோவை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், ஆட்டோவை திருடியது கோவை மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பதும், இவர் தொடர்ந்து ஆட்டோ திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
பாலமுருகனிடமிருந்து இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.