திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் தமிழகத்தின் மையப் பகுதியாக இருக்கின்றது. தினந்தோறும் இந்த ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பயணிக்கின்ற ரயில் நிலையமாக திருச்சி ரயில் நிலையம் இருக்கின்றது.
ஆகையால், இந்த ரயில் நிலையத்திற்கு 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், நூற்றுக்கணக்கான ஆட்டோக்களும் தினம்தோறும் பிரதான நுழைவு வாயிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிரதான வளாகத்திற்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளே செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால்
திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் பிரதான வாயிலுக்கு வந்து செல்லும் பயணிகளை அழைத்து செல்ல வந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் நுழைவு வாயிலில் நின்று கொண்டு விரட்டி அடித்தனர்.
இதனால் ஜங்சன் ரயில் நிலைய பிரதான வாயில் வழியாக வந்த ஆட்டோக்களில் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் பரிதவித்தனர்.
பின்னர் அவர்களுக்கு ரயில் திருமண மண்டபம் வழியாக புதிய வாயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இருந்தாலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேராக வரும் ரயில் பயணிகள் பிரதான வாசலை நோக்கிதான் செல்வது வழக்கம் என்பதால் காலை முதலே அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“