Ayodhya Verdict: பல ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கில் இன்று தீப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாநில முதல்வர்கள், அமைதி காக்கும்படி தங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
AyodhyAyodhya Verdict: Full Text Verdict:
அதில், அயோத்தி வழக்கு பல்வேறு நிலைகளை கடந்து, தற்போது உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
Ayodhya Case, Ayodhya Verdict
”அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் நிலையில், தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும். எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல், தமிழகத்தை தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ செய்ய அனைத்து மதத் தலைவர்களும், கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமதாஸ் அறிக்கை
"அயோத்தி நில வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வேண்டுமானாலும் வரலாம். இரு சகோதரர்களுக்கு இடையிலான சொத்து வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு எவ்வாறு அவர்களுக்கு இடையிலான உறவை சிதைத்து விடாதோ, அதேபோல் இந்த வழக்கின் தீர்ப்பும் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான உறவுக்கும், ஒற்றுமைக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது. அதற்கு எவர் ஒருவரும் இடம் கொடுத்து விடக் கூடாது. அது தான் நமது தாயகமான இந்தியாவை வலுப்படுத்தும்.
அயோத்தி வழக்கு தொடர்பாக அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதோ, வதந்திகளை பரப்புவதோ கூடாது. முகநூல், வாட்ஸ் ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அடுத்த சில நாட்களுக்கு சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்புவதைக் கைவிட வேண்டும். காட்சி ஊடகங்களிலும் அயோத்தி நில தீர்ப்பு குறித்த விவாதங்களை தவிர்ப்பது நலம் பயக்கும். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு எந்த ஒரு தரப்புக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல. அது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு நிலச் சிக்கலுக்கு முன்வைக்கப்படும் தீர்வாகவே பார்க்கப்பட வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன்
அயோத்தி வழக்கின் தீர்ப்பை நாட்டுமக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, நாட்டின் உறுதிக்கும், ஒற்றுமைக்கும் உதவிக்கரமாக செயல்பட வேண்டும் என தமாகா தலைவர் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சரத்குமார்
அயோத்தி விவகாரத்தில் வெளிவரவிருக்கும் தீர்ப்பினை மத ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.