பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (டிசம்பர் 6) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீசாரும், புறநகரில் 1,000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால் மற்றும் கடைவீதி பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அனுப்பபடுகிறது.

இது போன்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை ரயில் நிலையம், விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை மேற்கொள்கின்றனர்.

அதே சமயம் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இஸ்லாமிய அமைப்பினர் கோவை மாநகரில் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/