கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில், மனோஜ், சயான் ஆகிய இருவருக்கும் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்துடன் கூடிய ஜாமீன் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் தெஹல்கா நிறுவன முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், கொடநாடு சம்பவம் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் குற்றவாளிகள் சயான் மற்றும் மனோஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்ததாக கூறினர். இந்த விவகாரம் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவருக்கும் ஜாமீன்:
தொடர்ந்து மனோஜ், சயோன் ஆகிய இருவரும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்து விட்டார்.
மேலும் நேற்றைய (18.1.19) தினம் மீண்டும் நீதிபதி முன்னிலையில் மனோஜ், சயான் ஆகிய இருவரும் ஆஜரான நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தலா ரூ.10,000 வீதம் இருவரும் பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டதையடுத்து இருவரும் தொகையை செலுத்தி தனிநபர் உத்தரவாதம் அளித்தனர். இதனால் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அதேபோன்று பிணைத்தொகைக்கு தேவையான ஆவணங்களை வரும் திங்களன்று தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொல்லை குறித்து பரவி வரும் தகவல்களுக்கு பின்னால் திமுக இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஏனெனில் சயான் மற்றும் மனோஜ் ஜாமீன் விவகாரத்தில் இருவருக்கும் திமுக பிரமுகர் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுக்குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி,
“ ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கொடநாடு தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடநாடு சம்பவம் கூலிப்படையால் செய்யப்பட்டது. கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளது என்றும் சயான், மனோஜை ஜாமீனில் எடுத்தது திமுக தான்.
வாலையாறு பகுதியை சேர்ந்த மனோஜ் மீது கேரளாவில் கொலை வழக்கு உள்ளது. கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.” என்று தெரிவித்தார்.