உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி, பெரம்பலூர் காவல் துறையினரால் இன்று (ஜூலை 29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுவது), 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது, மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) , 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்ரி சேஷாத்ரி கைதுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்வீட்டரில் வெளியிட்ட பதிவு..
மணிப்பூரில் இரு பெண்கள் தாக்கப்பட்டு நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ இந்தியாவில் அதிர்வலககளை ஏற்படுத்தியது, அப்போது மணிப்பூரில் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தலைமை நீதிபதி சந்திர சூட் ஆதங்கம் தெரிவித்தார்.
அப்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சேஷாத்திரி, மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர், பத்ரி சேஷாத்திரி மீது பெரம்பலூர் மாவட்ட குன்னம் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை ஏற்ற பெரம்பலூர் காவல்துறையினர் அவரை இன்று காலை சென்னையில் வைத்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“