பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் கோவையில் ஆட்டு சந்தை சூடு பிடித்துள்ளது. ஆடுகளின் விலை 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை உயர்ந்து விற்பனை கலைகட்டி வருகிறது.
Advertisment
உலகம் முழுவதும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய உக்கடம்,போத்தனூர் கோட்டைமேடு, புல்லுக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர்.
மேலும் பக்ரீத் பண்டிகைக்கு அதிக நாட்கள் இல்லாத நிலையில் ஆடுகளின் விலைகள் 20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை உயர்ந்து விற்பனையாகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களை பொறுத்தவரை பக்ரீத் பண்டிகையை "ஹஜ் பெருநாள்" என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த தினத்தில் வசதி படைத்தவர்கள் தனியாக ஆடுகளை வாங்கி வளர்த்தி பக்ரீத் தொழுகைக்கு பின்பு பலியிட்டு, தங்களது வீட்டின் அருகில் இருப்பவர்கள், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து மகிழ்கிறார்கள். மேலும் வசதி குறைவாக உள்ளவர்கள் குழுவாக சேர்ந்து ஆடுகள் வாங்கி அனைவருக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள்.
இதன் முக்கிய நோக்கமே யாரும் பசியுடன் இருக்கக்கூடாது. அனைவரும் இறைவனின் அருளால் பசியாறி மகிழ்ச்சியுடன் ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இஸ்லாமியர்கள் இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
மேலும், பலியிடப்பட்ட ஆடுகளின் தோல்ககளை அருகில் உள்ள பள்ளிவாசல்களுக்கு தானமாக வழங்குகிறார்கள். அதில் கிடைக்கும் தொகை மூலம் ஏழை, எளிய, மற்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் பயன்டுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"