பக்ரீத் பண்டிகை வருகிற 7-ந் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் ஆட்டுசந்தைக்கு இன்று ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பல ஊர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் சரக்கு வாகனங்களில் ஆடுகள் கொண்டு வரப்பட்டன. ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், மதுரை, காரைக்குடி, உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
வழக்கத்தை விட இன்று ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. வழக்கமாக 15 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆடு ரூ.25 ஆயிரத்திற்க்கும், 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆடுகள் ரூ 30 ஆயிரத்திற்கும் விற்பனையானது. திருமண காலம் என்பதாலும், பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் உள்ளதாலும் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது.
இன்று காலை துவங்கிய ஆட்டுச் சந்தையில் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடி விற்பனையானது. தொடர்ந்து ஆட்டுச் சந்தை நடந்து வரும் நிலையில் சந்தை முடிவடையும்போது ரூ.5 கோடிக்கு மேல் வரை ஆடுகள் விற்பனையாக வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.