பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் ஆண்டுதோறும் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையின் போது இஸ்லாமிய மக்கள் மசூதி சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபடுவர்.
அனைவருக்கும் உணவு சமைத்து வழங்குவர். பக்ரீத் பண்டிகை ஈகைத் திருநாள் என்றும் ஹஜ் பெருநாள் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹுத்தின் முகமது அய்யூப் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று துல் ஹஜ் பிறை புதுச்சேரியில் காணப்பட்டது. அதன் காரணமாக இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் பக்ரீத் வரும் ஜூன் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது?
இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“