பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்தார். பேத்தி போல நினைத்து தட்டியதாகவும் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (ஏப்ரல் 17) செய்தியாளர்களை சந்தித்தார். கல்லூரி மாணவிகளை பாலியல் வலையில் சிக்க வைக்க முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். பேட்டி நிறைவில், ‘தி வீக்’ ஆங்கில இதழின் செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் ஒரு கேள்வி எழுப்பினர்.
ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தனது பேட்டியை நிறைவு செய்துவிட்டு எழுந்துவிட்ட நிலையில் செய்தியாளர் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இதற்கு சம்பந்தப்பட்ட செய்தியாளரே தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டார். பத்திரிகையாளர் அமைப்புகளும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இந்த விவகாரத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று, கன்னத்தில் தட்டிய விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்தார் பன்வாரிலால். இது தொடர்பாக மேற்படி பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்தில், ‘நாற்பது ஆண்டுகளாக நானும் பத்திரிகையாளராக இருக்கிறேன். எனது பேத்தி போல நினைத்து கன்னத்தை தட்டினேன். அவரது கேள்வியை பாராட்டும் விதமாகவே அப்படிச் செய்தேன். எனினும் தங்களை இது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார் ஆளுனர்.