/indian-express-tamil/media/media_files/lNxmQoCIsL0Shf0jXNhz.jpg)
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி
ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் ஏற்படும் கூட்டநெரிசலைக் குறைக்கும் நோக்கில், 'எம்-யுடிஎஸ் உதவியாளர்' (m-UTS Assistant) என்ற புதிய முன்னோடி திட்டம் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை, டிஜிட்டல் டிக்கெட் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திட்டம் செயல்படும் விதம்
இந்தத் திட்டத்தின் கீழ், இந்திய ரெயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட 'எம்-யுடிஎஸ் உதவியாளர்' பணியில் இருப்பார். இவர், ரயில்வே வழங்கிய கையடக்க எம்-யுடிஎஸ் சாதனம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அச்சுப்பொறி (Printer) மூலம் பயணிகளுக்கு உடனடியாக டிக்கெட்டுகளை வழங்குவார். பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், இந்த உதவியாளரை அணுகி தங்களது முன்பதிவு செய்யப்படாத சாதாரணப் பயண டிக்கெட்டுகளையும், சீசன் டிக்கெட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
எனினும், இந்த உதவியாளர்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளையோ அல்லது சலுகை அடிப்படையிலான டிக்கெட்டுகளையோ பெற முடியாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விரைவில் மற்ற நிலையங்களிலும் அறிமுகம்
வழக்கமான டிக்கெட் கவுண்ட்டர்களின் சுமையைக் குறைத்து, பயணிகளுக்கு விரைவான, வசதியான சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நாட்டின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களைத் தொடர்ந்து, தற்போது சென்டிரல் நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சென்டிரல் நிலையத்தைத் தொடர்ந்து, விரைவில் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலும் இந்த 'எம்-யுடிஎஸ் உதவியாளர்' திட்டம் விரிவுபடுத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us