விருதுநகர் மாவட்டம் படந்தல் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி, தடைகள் பல கடந்து JEE (Advanced) தேர்வில் சிறப்பான தரவரிசைப் பெற்று, ஐஐடி பம்பாயில் (IIT Bombay) விண்வெளிப் பொறியியல் (aerospace engineering) படிக்கும் தனது கனவை நனவாக்கி உள்ளார்.
பள்ளி படிப்பில் சராசரி மாணவியாக இருந்த யோகேஸ்வரிக்கு, 7-ம் வகுப்பு படிக்கும்போதே விண்வெளிப் பொறியியல் மீது ஆர்வம் வந்துள்ளது. "எப்படியோ, இந்தத் துறையில் எனக்கு ஆர்வம் வந்துவிட்டது," என்று அவர் கூறினார். குடும்பத்தின் ஏழ்மை நிலை உட்பட அனைத்து தடைகளை கடந்து தனது லட்சியத்தை அடைய இந்த ஆர்வம் அவருக்கு உதவியது.
யோகேஸ்வரியின் தந்தை டீக்கடையில் பணிபுரிகிறார். அவரது தாய் பட்டாசு ஆலையில் ஊழியராக இருக்கிறார். நிதி நெருக்கடி இருந்த போதிலும், இந்த தம்பதியினர் தங்கள் 2 மகன்களையும் கல்லூரிப் படிப்பை முடிக்க வைத்ததோடு, மகள் யோகேஸ்வரியையும் சிறப்பாகப் படிக்க வைத்தனர்.
யோகேஸ்வரிக்கு 12-ம் வகுப்பு படிக்கும் வரை JEE தேர்வு பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 'கல்லூரி கனவு' நிகழ்வில் கலந்துகொண்டபோதுதான் அவருக்கு இந்தத் தேர்வு குறித்து தெரியவந்துள்ளது. "அப்போதுதான் ஐஐடியில் சேர்வதற்கான தேர்வு குறித்து எனக்குத் தெரியவந்தது," என்று யோகேஸ்வரி கூறினார். "சிறிது கடினமாக உழைத்தால் நமது கனவுகளுக்குச் சிறகுகள் முளைக்கும் என்று எங்களுக்குக் கூறப்பட்டது. ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்வது அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கான பெரிய பாய்ச்சலாக இருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மாணவர்களுடன் கலந்துரையாடிய 'கலெக்டருடன் ஒரு காபி' (Coffee with Collector) நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் அவருக்குப் பெரும் ஊக்கத்தை அளித்தது. எந்தவித தனியார் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லாமல், JEE (Advanced) தேர்வில் சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளார். அவரது திறமைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 230 மாணவர்களில் யோகேஸ்வரியும் ஒருவர் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் கீழ் நியமிக்கப்பட்ட கல்வி நிபுணர் ஒருவர், யோகேஸ்வரி கணிதத்தில் சிறந்து விளங்கியதால் அவரைத் தேர்வு செய்தார். "ஆரம்பத்தில், பயிற்சிக்கு என்னை வீட்டிலிருந்து வெளியனுப்ப பெற்றோர் தயங்கினர். இருப்பினும், அது எனக்கு வெற்றியைத் தரும் என்பதால், ஈரோடுக்கு அனுப்பத் துணிந்தனர்" என்று யோகேஸ்வரி கூறினார்.
அவரது பிளஸ் டூ தேர்வு முடிந்த பிறகு ஈரோட்டில் பெற்ற 40 நாள் பயிற்சி மட்டுமே, நாட்டில் உள்ள மிகவும் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான JEE (Advanced) தேர்வை எதிர்கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரே பயிற்சி ஆகும். இந்த குறுகிய காலப் பயிற்சியைக் கொண்டு, யோகேஸ்வரி தேசிய அளவில் போட்டி நிறைந்த இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் வழியில் கல்வி பயின்ற போதிலும், ஈரோட்டில் கிடைத்த பயிற்சி காலத்தில் ஆங்கில வார்த்தைகளைத் திறம்பட கற்றுக்கொண்டு, முதல் முயற்சியிலேயே JEE (Advanced) தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் யோகேஸ்வரி. இது அவரது அபார கற்றல் திறனுக்குச் சான்றாகும்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (non-creamy layer of the Other Backward Classes community) மாற்றுத் திறனாளிப் பிரிவில் 75-வது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த யோகேஸ்வரியைப் பாராட்டினார். மேலும், மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி ஒதுக்கீட்டில் இருந்து அவருக்கு ₹5,000 நிதியுதவியும் வழங்கினார். "ஐஐடியில் எனது கல்விச் செலவுகளை மாநில அரசே கவனித்துக் கொள்ளும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்" என யோகேஸ்வரி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விண்வெளிப் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) சேர வேண்டும் என்பதில் யோகேஸ்வரி உறுதியாக உள்ளார்.