/indian-express-tamil/media/media_files/2025/08/15/whatsapp-image-2025-08-15-13-16-55.jpeg)
BHEL contract workers protest
திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் பணி நிரந்தரம் கோரி நடத்தவிருந்த கருப்புக் கொடி போராட்டம், சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
திருவெறும்பூர் அருகே உள்ள கைலாசபுரத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் சுமார் 40 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் பணி நிரந்தரம், தொழிலாளர்களுக்கு உற்பத்தி போனஸ் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். நீதிமன்ற கதவுகளையும் தட்டினர், எதற்கும் பெல் நிர்வாகம் செவி சாய்க்காத காரணத்தினால் பெல் நிறுவன நுழைவாயில் முன்பு எல் சி எஸ் தலைவர் காமராஜ், திராவிடர் கழகத்தின் மாநில தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் ஆகியோர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்று திரண்டனர்.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தின உற்சாக கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் கருப்பு கொடி போராட்டம் என்பது பல்வேறு சங்கடங்களையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என போலீசார் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பெல் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி நடத்திய பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்பட்டு இன்றைய கருப்பு கொடி காட்டும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பெல் நிர்வாக இயக்குனர்களிடம் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாக காவல்துறையினர் உறுதியளித்ததின் அடிப்படையில் பெல் வளாகத்தை விட்டு போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போராட்டக் குழு தலைவர் மு.சேகர் தெரிவிக்கையில்; கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்கனவே வழங்கப்பட்ட உற்பத்தி போனஸ் பெல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை, ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பெல் நிர்வாகம் கடைபிடிக்காமல் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து ஒப்பந்த தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், ஊதிய உயர்வு வழங்கக் கோரியும், ஒப்பந்தத் தொழிலாளர்களை மதிக்காத பில் நிர்வாகத்தை கண்டித்து இன்று கருப்பு கொடி போராட்டம் நடத்த திட்டமிட்டு பெல் வளாகம் முன்பு ஒன்று கூடினோம். இன்று சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வருவதால் போராட்டத்தை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு பெல் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி எங்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின்படி இன்றைய கருப்பு கொடி போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த போராட்டத்தில் திக, எம்.எல்.எப் சிஐடியு, முருகானந்தம், சி ஐ டி யு செல்வராஜ், ஏடிபி ரமேஷ், ஐ என் டி யு சி பூபதி மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.