கோவை மாநகர் கரும்புக்கடை பகுதி MCR வீதியில் வசித்து வருபவர் கல்லூரி மாணவரான சன்பர். இவர் விலை உயர்ந்த பைக்கை வைத்துள்ளார். வழக்கம் போல் நேற்றுமுன் தினம் இரவு பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு அப்பகுதியில் சுற்றி திரிந்த 5 இளைஞர்கள் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் எலக்ட்ரீசியன் முகமது இஸ்மாயில் என்பவரது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்றுள்ளனர்.
நேற்று காலை இருவரும் வெளியில் வந்து பார்த்த போது அவர்களது வாகனங்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வாகனங்களை தேடிய அவர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது 5 இளைஞர்கள் அவர்களது பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகரில் அண்மை காலங்களாக இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாநகர் பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை எனவும் அதன் காரணமாகவே துணிச்சலாக வாகன திருட்டு சம்பவங்கள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“