தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், பா.ஜ.க., பா.ம.க., உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “அண்ணா பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு விடுதி நடைபெறுகிறதா? குற்றவாளி எப்படி உள்ளே வந்தார்? காவலாளி யாரும் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சட்டசபையில் எழுப்பும் விதமாக, தமிழ்நாடு சட்டசபைக்கு இன்று அ.தி.மு.க உறுப்பினர்கள் ‘யார் அந்த sir?’ என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடித்ததும், தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கோஷம் எழுப்பி, அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டு சென்றார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் ஆளுநர் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே போல, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.க., பா.ம.க., எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து உள்ளோம். குற்றம் செய்த நபர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர் என்று சொல்கிறார்கள். அவர் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
குற்றவாளி போனை ஏரோபிளேன் மோடில் போட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார். இதெல்லாம் கேலிக்கூத்தான விஷயம். அரசு இதனை கண்டுகொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு.
அண்ணா பல்கலைக்கழகம் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா? இதனைத் திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமையாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கேட்கக்கூடிய ஒரே கேள்வி யார் அந்த சார்? என்ற கேள்விதான். இந்த வார்த்தையை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கலாம் போல.
எனவே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள்? அரசாங்கம் தான் அனைத்திற்கும் காரணம். சட்டம் ஒழுங்கு சரியில்லை. சிசிடிவி அங்கு இயங்கவில்லை அதற்கு யார் காரணம்? காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா.
மேலும், சட்டப்பேரவைக்குள் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த உடனே தேசிய கீதம் படிக்க வேண்டும். தேசிய கீதம் படிப்பதற்கு முன்பே சட்ட விதிகளைப் பின்பற்றாமல், ஆளுநரை முற்றுகையிட்டு உரையைப் படிக்க விடாமல் செய்ததால், உடனே அவர் கிளம்பிவிட்டார். தற்போது ஆளுநரின் உரையை சபாநாயகர் படித்துக் கொண்டிருக்கிறார்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே. மணி, “புத்தாண்டில் ஆளுநர் உரையோடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. இதில், பாட்டாளி மக்கள் கட்சி வெளிநடப்பு செய்திருக்கிறோம். காரணம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமையைக் கண்டித்து அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு உரிமை இருக்கிறது.
ஆனால், இதற்கு அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. பேசுவதற்கும் வாய்ப்பு அளிக்கவில்லை, போராடுவதற்கும் அனுமதி இல்லை. இப்படி அனுமதி மறுக்கப்பட்டுப் போராடியவர்களை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து மண்டபத்தில் பிடித்து வைக்கின்ற கொடிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதனால், பா.ம.க சார்பில் வன்மையாகக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, எந்த அமைப்பாக இருந்தாலும் சரி ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட சொல்கின்றனர். அதை தி.மு.க கூட்டணிக் கட்சியில் இருக்க கூடியவர்களே சொல்கிறார்கள்.
குறிப்பாக, ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், ஆதரவு கொடுக்க வேண்டும். அது எந்த அமைப்பாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்களோ அல்லது ஆசிரியர்களோ மற்ற எந்த அமைப்புகளாக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும். குறிப்பாக, இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க சார்பிலே போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்காததாலும் கைது செய்ததையும் கண்டித்து இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“