தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக இங்கிலாந்து சென்று விட்டு நேற்றிரவு (ஜுன் 26) சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பா.ஜ.க. சார்பாக இங்கிலாந்துக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றேன். பிரிட்டன் பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுடன் உரையாற்றினேன். இலங்கை பிரச்னை, வடகிழக்கு பிரச்னை போன்றவற்றில் இந்தியா எடுத்திருக்கக்கூடிய முடிவுகளுக்கு இங்கிலாந்து தமிழர்கள் பாராட்டுகிறார்கள். வடகிழக்குப்பகுதியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரதமர் செய்த பணிகள் குறித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பாராட்டுகிறார்கள்" என்றார்.
தொடர்ந்து. "எனது தமிழக நடைபயணத்தை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர உள்ளார். அவரது தேதிக்கு காத்திருக்கோம். இன்னும் இரண்டு நாட்களில் தேதி பற்றி தகவல் வரும். ஜுலை 2-வது வாரத்தில் கட்சி சார்பாக மற்றொரு ஊருக்கு பயணம் செய்ய உள்ளேன். இதன் பின் 2-வது அல்லது 3-வது வாரத்தில் நடைப் பயணம் தொடங்க உள்ளேன். ஜூலை 9-ம் தேதி ல் தி.மு.க. கோப்புகள்-2 வெளியிடப்படும்" என்றார்.
சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து பேசிய அவர், "அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. திமுக அரசு முன்னுக்குப் பின் முரணாக சிதம்பரம் கோயில் விவகாரத்தில் செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களை வைத்து ஒவ்வொரு புதிய பிரச்னையை தி.மு.க. அரசு உருவாக்குகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.
பின்னர், செய்தியாளர் ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை லண்டனில் ரகசியமாக சந்தித்தீர்களா எனக் கேட்டார். கேள்வியால் கேபமடைந்த அண்ணாமலை, எட்டாங் கிளாஸ் படிக்கிற பையன் மாதிரி கேள்வி கேக்கக்கூடாது. ரோட்ல டீ குடிக்கிற மாதிரி கேள்வி கேக்கக்கூடாது. நீங்க கேக்குறது முட்டாள்தனமா இல்லயா? என ஆவேசமடைந்தார். தொடர்ந்து Source யார்? யாருக்கு உங்களுக்கு சொன்னார்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“