/indian-express-tamil/media/media_files/h6t852SQmDVq47C9Pfm7.jpg)
பா.ஜ.கவின் என் மண், என் மக்கள் யாத்திரை கோவை கணபதி பகுதியில் துவங்கி இடையர்பாளையம் பகுதியில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யாத்திரை நிறைவில் பேசிய அண்ணாமலை, "கோவை பாஜகவின் கோட்டை. பாஜக வேறு இடத்தில் வியர்வை கொடுத்து வளர்த்தது என்றால், கோவையில் ரத்தத்தை கொடுத்து வளர்த்தது. கோவையில் அனைத்து தரப்பு மக்களும் என் மண், என் மக்கள் யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கோவைக்கு பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. ஏழை மனிதர்களுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. சுத்தமான அரசியலை செய்ய எந்த பணமாக இருந்தாலும், பயனாளர்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. பிரதமர் மோடி கரத்தை பலப்படுத்த நம்மாலான பணிகளை செய்ய வேண்டும். 2024 தேர்தல் இந்தியாவிற்கான தேர்தல். தனி மனிதனுக்கான தேர்தல் அல்ல. மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். 2028-ல் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும்.
பாஜக நேர்மையான அரசியலை நடத்தி காட்ட முடியும் என நிரூபித்து காட்டியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக மீது ஊழல் புகார்களை சொல்லி வருகிறார். திமுக அரசின் ஊழலுக்கு முதலமைச்சர் செல்ஃப் சர்டிபிகேட் தருகிறார். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்தியாவில் இதுபோன்ற ஊழல் அமைச்சரவையை பார்த்திருக்க முடியாது. தற்போது மகனுக்கும், மருமகனுக்குமான ஆட்சி நடக்கிறது. அதிகாரிகள் அவர்களுக்கு வேலை செய்கிறார்கள். தராசு தட்டில் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியையும், இன்னொரு பக்கம் ஊழல் ஆட்சியையும் மக்கள் வேறுபடுத்தி பார்க்கிறார்கள்.
கமல், உதயநிதி மீது கடும் தாக்கு
2024 தேர்தல் வளர்ச்சிக்கான தேர்தல். தலை எழுத்தை தீர்மானிக்கும் தேர்தல். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 39க்கு 39 அனுப்ப வேண்டியது நமது கடமை. பிரதமர் மோடி தமிழில் சரளமாக பேசினால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிடும். மண்ணை, மக்களை, கலாச்சாரத்தை மோடி நேசிக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் கோவை நரேந்திர மோடி பக்கம் நிற்கும். திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் தீவிரவாதம், மின்வெட்டால் கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கோவை வளர்ச்சிக்கு எதிரான கட்சி திமுக. 50 சதவீதம் வரை மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளது. பீக் ஹவர் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். சிறு தொழிற்சாலைகளை திமுக ஆட்சி நசுக்கிவிட்டது.
கோவையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு கூட்டம் வருகிறது. ஆனால் கட்சிக்கு கூட்டம் வரவில்லை என பேசியிருக்கிறார். 2021-ல் சினிமாவில் யார் நடிக்கிறார்கள், நிஜத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து வானதி சீனிவாசனை மக்கள் வெற்றி பெற வைத்தார்கள். கமல்ஹாசன் நன்றாக நடிப்பதை பார்க்க விக்ரம் படத்திற்கு கூட்டம் வருகிறது.
தி.மு.கவை தலைகீழாக எதிர்த்த கமல்ஹாசன், பணத்திற்காக உதயநிதி ஸ்டாலின் சொல்லியபடி நடிக்கிறார். நீங்கள் மிகப்பெரிய நடிகர் , உங்கள் கால் தூசிக்கு உதயநிதி ஸ்டாலின் சமமாவாரா? கொள்ளையடித்து பணம் சம்பாதித்துள்ளார்கள். படத்திற்கு ரூ.100 கொடுப்பார்கள் என்பதற்காக உங்கள் தன்மானத்தை முழுவதுமாக உதயநிதி ஸ்டாலினிடம் ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு அடமானம் வைத்து விட்டு இன்று தைரியமாக மீண்டும் கோவை வந்து இங்க போட்டியிடுவதாக சொல்கிறீர்கள். கோவை மக்கள் உஷாரானவர்கள்" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமரை கடவுளாக பார்க்க வேண்டும்
தொடர்ந்து, பெரும்பாலான பெண்களுக்கு உரிமை தொகை வரவில்லை. பல வரிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தை கடன்கார, குடிகார மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது. திமுக சனாதன தர்மம், இந்து தர்மத்திற்கு எதிரானது. மருதமலை முருகன் கோவிலுக்கு சின்னப்ப தேவர் தான் மின்சாரம் வாங்கி கொடுத்தவர். திமுக மின்சாரம் கொடுக்கமால் வைத்திருந்தது. எம்.ஜி.ஆரை சந்தித்து மருதமலை முருகன் கோவிலுக்கு மின்சாரம் வாங்கி கொடுத்தார்.
சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் பாஜகவினர் 400 பேர் புகார் அளித்து பட்டத்து இளவரசர் மீது 1 வழக்கும் இல்லை. சனாதனத்தை இழிவுபடுத்திய திமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் டெபாசிட் இழந்து தோற்கடிக்க வேண்டும். 33% மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால் பிரதமரை கடவுளாக பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.