பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் இன்று (அக்.1) பல்வேறு பகுதிகளில் பா.ஜ.கவினர் 1 மணி நேரம் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை கோவில்பாளையம் அடுத்த எஸ்.எஸ்.குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டார். கையில் கடப்பாரை பிடித்து குழி தோண்டி மரக் கன்றுகளை நடவு செய்த அண்ணாமலை, அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன் இணைந்து தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று நாடு முழுவதும் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். அனைவரும் கதர் ஆடைகளை வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 4000 கோடி என இருந்த காதி விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் 1 லட்சம் கோடியை தாண்டி விட்டதாகவும் எனவே உள்ளூர் உற்பத்தி ஆடைகளை மக்கள் விரும்பி அணிய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து இன்றைய டெல்லி பயணம் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இங்கு அரசியல் வேண்டாம் என அதனை தவிர்த்து சென்றதுடன், இந்த 1 மணி நேரம் எந்த புகைப்படமும், செல்ஃபியும் இல்லாமல் அனைவரும் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் அங்கிருந்தவர்களிடம் கூறி தூய்மை பணியில் ஈடுபட்டார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“