தி.மு.க மூத்த தலைவர், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக முன்னாள் டி.ஜி.பி ஜாபர்சேட் இருவரும் 2ஜி விசாரணை தொடர்பாக பேசுவது போன்ற தொலைபேசி உரையாடல் இடம் பெற்றுள்ள தி.மு.க ஃபைல்ஸ் பாகம் 3-ஐ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.
அண்ணாமலை கடந்தாண்டு ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க ஃபைல்ஸ் முதல் பாகத்தை வெளியிட்டார். அதில் தி.மு.க மூத்த தலைவர்கள், எம்.பிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். ஜெகத்ரட்சகன் எம்.பி, அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.
அதைத் தொடர்ந்து ஜூலையில் தி.மு.க ஃபைல்ஸ் 2-ம் பாகத்தை வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. தி.மு.க ஃபைல்ஸ் குறித்து அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவி இடம் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், தி.மு.க ஃபைல்ஸ் 3-ம் பாகத்தை நேற்று வெளியிட்டார். அதில் டி.ஆர்.பாலு மற்றும் தமிழக முன்னாள் டி.ஜி.பி ஜாபர்சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.
2ஜி விசாரணை தொடர்பாக இருவரும் பேசுவது போன்ற ஆடியோ இடம் பெற்றுள்ளது.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் இந்த ஆடியோவை வெளியிட்டு, 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஊழல் தன்மையை அம்பலப்படுத்தும் பல டேப்களில் இதுவும் ஒன்று. டி.ஆர்.பாலு, ஜாபர் சேட் உரையாடலில், 2ஜி விசாரணையில் சி.பி.ஐ ரெய்டுகளின் நேரத்தை தி.மு.க, காங்கிரஸ் முடிவு செய்து, விசாரணையை நீர்த்து போக செய்யும் வகையில் செயல்பட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும், இதுபோன்று இன்னும் 14 டேப்புகள் இருக்கிறது. இந்த டேப் பாகம்-3. தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஒரு ஆழமான தாக்கத்தை உண்டு செய்யும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“