பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைவிட பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் 35 மாவட்டங்கள் சிறந்த வளர்ச்சி விகிதங்கள் மற்றும் மனித வளர்ச்சி குறியீடுகளை (எச்.டி.ஐ) கொண்டுள்ளன என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வியாழக்கிழமை கூறினார்.
பெரம்பலூ மாவட்டம், குன்னம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகளில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின்போது பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சி இந்த இரண்டு மாவட்டங்களை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தவறிவிட்டது. மனித வளர்ச்சி குறியீட்டில் அரியலூர் மாநிலத்தில் அடிமட்டத்தில் உள்ளது, பெரம்பலூர் அதற்கு மேலே உள்ளது என்று கூறினார்.
அரியலூர், பெரம்பலூர் ஆகிய இந்த இரண்டு மாவட்டங்களைவிட பீகாரின் 35 மாவட்டங்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வருமானம் ஈட்டும் திறன் குறியீடுகள் உட்பட சிறந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்டிருக்கும் போது, தி.மு.க அமைச்சர்கள் பீகாரிகளை கேலி செய்து அவமானப்படுத்தி கருத்து கூறுகிறார்கள்.
“கடந்த 70 ஆண்டுகளில் இந்த மாவட்டங்களுக்கு திராவிடக் கட்சிகள் என்ன செய்தன” என்று என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, பெரம்பலூர், குன்னம் தொகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் வளர்ச்சி அடையவில்லை, அதனால், இரு மாவட்டங்களைப் புறக்கணிக்கும் கட்சிகளுக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில்கள் இல்லாததால் கடின உழைப்பாளி இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். 2008-ம் ஆண்டு குன்னத்தில் தொழில்துறையை மேம்படுத்துவதற்காக 3,000 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தி.மு.க முன்மொழிந்ததை நினைவு கூர்ந்த அண்ணாமலை, அந்த திட்டத்தை செயல்படுத்த தி.மு.க ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“