தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. திரும்பும் திசை எல்லாம் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொதுமக்களை மீட்டு உதவி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு உதவிகளை வழங்கிய வருகின்றனர். இந்நிலையில், மத்தியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது ஆலோசனை கூட்டம்
டெல்லியில் இன்று (டிச.19) நடைபெறுகிறது.
காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கெஜ்ரிவால், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று உள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது X பக்கத்தில் கூறுகையில், " ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார்" என்று விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி ஆலோசனைக்குப் பிறகு இரவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். சென்னை மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பு குறித்து எடுத்துரைத்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil