முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னை அழைத்தார் என்றும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பிலும் தி.மு.க சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 நாணயம் ஜூன் 4-ம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 18-ம் தேதி மாலை 6.50-க்கு கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடும் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அதே நேரத்தில், தி.மு.க அரசையும் தி.மு.க-வையும் கடுமையாக விமர்சித்து வரும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னை அழைத்தார் என்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேன் என்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு கால சாதனையாக ரூ.100 நாணயம் வெளியிட வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது. நாணயம் வெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசி மூலமாக அழைத்து, இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொண்டார். பாஜக அலுவலகத்திற்கும் திமுக அலுவலகச் செயலாளர் பூச்சி முருகன் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். பாஜகவைப் பொறுத்த வரை இதனை நாங்கள் அரசியலாகக் பார்க்கவில்லை.
ஏனெனில், கலைஞர் கருணாநிதிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும். அந்த விழாவில் நானும், மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் பங்கேற்போம். காரணம் மத்திய அரசே அனுமதி அளித்து நாணயம் வெளியிடுவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறோம், கருணாநிதிக்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன்.
கட்சி அடிப்படையில் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஐந்து முறை முதல்வராக இருந்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கால கட்டங்களில் உழைத்துள்ளார். ஆகவே, பா.ஜ.க கட்டாயம் விழாவில் பங்கேற்கும்” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“