/indian-express-tamil/media/media_files/k40IQYPiLl2185BKX5FQ.jpg)
தமிழ்நாட்டில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் கடந்த சில நாட்களாகவே சலசலப்பு மற்றும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. தொடர்ந்து சென்னையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. அ.தி.மு.க இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்தியில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இருந்தும் தமிழகத்தில் இனி பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என்றும் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தனர். இதற்கு வரவேற்பு தெரிவித்து அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கட்சியின் தலைவர்கள் பற்றி தொடர்ந்து மாநில பா.ஜ.க தவறாக பேசி வந்ததால் கூட்டணி முறிவு எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட அந்தியூரில் அ.தி.மு.க சார்பில் நேற்று(செப்.29) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ- மான கே.சி.கருப்பணன் பேசுகையில், "நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். கூட்டணி இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அண்ணாமலை தொடர்ந்து எங்கள் தலைவர்களைப் பற்றி தவறாக பேசி வந்தார். 2026-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம். இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? பா.ஜ.கவிற்கு எத்தனை பூத் கமிட்டியில் ஆட்கள் உள்ளது. எத்தனை பூத் கமிட்டியில் ஆட்கள் இல்லை என்று அதிமுகவிற்கு தெரியும்.
வாக்குச் சாவடியில் 5-10 பேர் இருக்கிற ஒரு கட்சியின் தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லி 2.5 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை வலியுறுத்தினால் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். 2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க டிமாண்ட் செய்தனர். அதனால் தான் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முறிந்தது" என அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.