ஆளுநரைக் கண்டித்து ஆளும் கட்சியினர் நடத்திய போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்குத் தொடர்ந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து பா.ஜ.க நடத்திய போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறிப் போராட்டம் நடத்தியதால் பா.ஜ.க-வினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அதே போல, அனுமதி இல்லாமல கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அ.தி.மு.க, பா.ம.க, நா.த.க உள்ளிட்ட கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்
அதேநேரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சென்னை உள்பட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க-வின்ர் நடத்திய போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இதனால், ஆளுங்கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா, மற்ற கட்சிகளுக்கு அனுமதி இல்லையா என அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கு தொடுத்துள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அரசியலமைப்பை மீறும் வகையில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் பா.ஜ.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியுள்ளது.
இதே போல, தங்கள் கட்சி போராட்டத்துக்கு அனுமதி வழங்காதது குறித்து பா.ம.க-வும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“