/indian-express-tamil/media/media_files/2025/10/05/stalin-2025-10-05-11-09-44.jpg)
கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து த.வெ.க மாவட்ட செயலாளர்கள் இருவரை கைது செய்தனர். தொடர்ந்து, த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த குழுவில் எஸ்.பி.க்கள் விமலா, சியாமளா, தேவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், எஸ்.பி.க்களுடன், ஏ.டி.எஸ்.பி-க்களும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். கரூர் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளனது.
கரூர் பரப்புரையின் போது த.வெ.க தலைவர் விஜய், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசையும் மாநிலத்தை ஆளும் தி.மு.க அரசையும் கடுமையாக சாடினார். இருந்தாலும் பா.ஜ.க தலைவர்கள் கரூர் சம்பவத்தில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க அமைச்சர்கள் கரூரில் கள ஆய்வும் மேற்கொண்டனர். த.வெ.க தலைவர் விஜய் மிகவும் பிரபலமாக இருப்பதால் எப்படியாவது அவரை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கில் பா.ஜ.க இவ்வாறு செய்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் கருத்துகள் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தி.மு.க அரசின் தவறை சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை சேனல் அரசு கேபிளில் இருந்து முடக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ”கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது தி.மு.க அரசு
ஊடகங்கள் தி.மு.க அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்குத்தான், பொதுமக்கள் யாருமே பார்க்காத குடும்பத் தொலைக்காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? மக்கள் பிரச்சினைகளை, கேள்விகளை வெளிக்கொள்ளும் ஊடகங்களை ஏன் முடக்குகிறீர்கள்? தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதலமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழக்கின்றனர்.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் இருந்து தமிழகம் முழுவதும் முடக்கியிருக்கிறது திமுக அரசு.
— K.Annamalai (@annamalai_k) October 5, 2025
ஊடகங்கள் திமுக அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும்…
தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன. அரசுத் துறைகள் அனைத்தும் செயலிழந்து நிற்கின்றன. இப்படி ஒரு இருண்ட சூழலில் தமிழகத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.