தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் அவர் பேசியதாக ஒரு ஆடியோ கிளிப்பை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ டேப் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதனை ஊடகவியலாளர் சவுக்கு சங்கரும் அண்ணாமலையும் அடுத்தடுத்து வெளியிட்டார்கள். இந்த ஆடியோ விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு விளக்கம் தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், இது மோசடியாக தயார் செய்யப்பட்டது என குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்: ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 2 வது நாளாக தொடரும் சோதனை
இந்த நிலையில் அமைச்சர் பி.டி.ஆர் பேசியதாக மீண்டும் ஒரு டேப் அண்ணாமலையின் ட்விட்டர் (twitter) பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், அமைச்சர் பி.டி.ஆர் பேசுவதாக குறிப்பிட்டு, ஆங்கிலத்தில் வரும் பேச்சுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் போடப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், “ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன். பா.ஜ.க.,விடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர்.
நிதி மேலாண்மை செய்வது சுலபம்... இது ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அத்தனையையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்... முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே... அவர்களை நிதி மேலாண்மைச் செய்யச் சொல்லுங்கள்... அதனால் 8 மாதங்கள் பார்த்தப் பிறகு முடிவு செய்துவிட்டேன்... இது ஒரு நிலையான முறை கிடையாது...
எனக்கு இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால்... இப்போது நான் விலகினால்... இந்தக் குறுகிய காலத்தில் நான் வெளியே சென்றால் அவர்கள் செய்தது அனைத்தும் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்... எப்படி சொல்வது... நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது எனக் கருதுகிறேன். நான் அந்தப் பதவியில் இல்லாதபோது அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய கவலை எனக்கு இல்லை,” என்று பேசப்பட்டுள்ளது.
இந்த ஆடியோ அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்த ஆடியோவை பகிர்ந்துள்ள அண்ணாமலை, ”தி.மு.க அமைப்பு உள்ளுக்குள்ளே சிதைவதை கேளுங்கள். தமிழக நிதியமைச்சரின் 2வது டேப். தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே சரியான வேறுபாட்டைக் காட்டிய தமிழக நிதியமைச்சருக்கு சிறப்பு நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil