/indian-express-tamil/media/media_files/2025/02/18/G7QpRj6zLSG6BazKNg2f.jpeg)
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், விகடன் இதழ் மீது புகார் அளிக்க வந்த பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், வேலூர் இப்ராஹிம், கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய எஸ் ஆர் சேகர், ”பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில், கடந்த பத்தாம் தேதி அன்று தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கை ஆனந்த விகடன், இந்தியாவின் பிரதமரை கை விலங்கு கால் விலங்கிட்டு, வேற்று நாட்டினுடைய ஜனாதிபதி அருகே அமர்ந்திருப்பது போல கைதி போன்ற சித்தரித்து அவமானப்படுத்தி உள்ளது. ஒரு கார்ட்டூன் சித்திரம் வெளியிட்டு அதனை அவர்கள் கருத்து சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் என்கிறார்கள். அதற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை புகார் கொடுத்து, அந்த பத்திரிகையின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதற்கு, கண்டதை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகளாக சென்றவர்களை அவர்கள் நாட்டின் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் கண்டனம் கூட தெரிவித்தோம். சட்டவிரோத குடியேறிகளை நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் கூற முடியாது. ஏன் நம் நாட்டில் இருக்கக்கூடிய பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷில் இருக்கக்கூடிய சட்டவிரோத குடியேறிகளை நாம் வெளியில் அனுப்பி கொண்டிருக்கிறோம். பங்களாதேஷில் இருக்கக்கூடிய சட்டபூர்வ இந்திய குடிமகன்களை பங்களாதேஷ் அடித்து வெளியே துரத்துகிறார்கள், அதற்கு இந்த கருத்து சுதந்திரம் கொண்டவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த மதசார்பற்றவாதிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதற்கு ஒரு கருத்து இல்லை, ஒரு கார்ட்டூன் இல்லை, ஒரு பேச்சு கூட இல்லை, ஒரு அறிக்கை கூட இல்லை.
என்னுடைய கை உங்களுடைய மூக்குக்கு ஒரு சென்டிமீட்டர் முன்னர்தான் உள்ளது என்று அம்பேத்கர் கூறியிருக்கிறார். இந்த நாட்டினுடைய இரண்டாவது குடிமகன் பிரதமர், வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவின் பெயரை முதன்முறையாக, மதிக்கத்தக்க வகையில் செயல்படுத்தியவர் நரேந்திர மோடி. இங்கு நீங்கள் கட்சிகளை மறந்து விடுங்கள், வேறு ஒரு நாட்டு ஜனாதிபதி முன்பு நம் நாட்டுப் பிரதமரை விலங்கு பூட்டி அமர வைத்திருப்பது போன்ற கார்ட்டூன் கருத்து சுதந்திரமா?
இது என் நாட்டின் இறையாண்மையின் மீது விடுக்கப்பட்ட சவால். அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை எரிப்பதற்கு பெயர் கருத்து சுதந்திரமா?, ஒரு பிரசிடன்ட்டை ஆடை இல்லாமல் காண்பிப்பது கருத்து சுதந்திரமா?. அரசியலுக்கும் அளவு உண்டு. தேசத்தை அவமானப்படுத்தும் வகையில் போடப்படுகின்ற கார்ட்டூன் கருத்து சுதந்திரம் அல்ல, அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
கருணாநிதிக்கு பின்பு யார் முதல்வராக வருவார்கள் என கருத்துக்கணிப்பு வெளியிட்ட தினகரன் சூறையாடப்பட்டது, மூன்று அப்பாவி ஊழியர்கள் கொளுத்தப்பட்டார்கள். இவர்கள் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தமிழகத்தின் முதல்வராக இருக்கக் கூடியவர், எங்கு அரசியல் செய்ய வேண்டுமோ அங்கு அரசியல் செய்ய வேண்டும், நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலுக்கு அரசியல் செய்யக்கூடாது. தேசத்தின் இறையாண்மைக்கு, கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களை செய்வதை பாரதிய ஜனதா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், அவர்கள் இணையதள பக்கம் முடக்கப்பட்டதற்கு கேஸ் போடுகிறார்கள், அதனால் இதற்கு கண்டனங்களை தெரிவித்து விகடன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்க சட்டம் என்பது என்னவென்று உங்களுக்கு தெரியும், இந்திய சட்டம் என்பது நமக்குத் தெரியும், குலாப் ஜாமுனும், ஜாங்கிரியும் கொடுத்து ஃபாரினரை நாம் உபசரிக்க மாட்டோம், நம் சட்டப்படி தண்டனை எதுவோ அவருக்கும் உரித்தானது தான். அமெரிக்கா செய்ததை நாம் எப்பொழுதும் கண்டித்து இருக்கிறோம், ஆனால் இவர்கள் சட்டவிரோதமாக சென்றதற்கு ஒருபோதும் கண்டிக்க முடியாது.
பத்திரிக்கையாளர்களுக்கு நான் ஒரு அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். நிறைய அரசியல் செய்வோம், ஆனால் தேசத்தினுடைய பாதுகாப்பு, மரியாதை இறையாண்மை ஆகியவைகளை அடகு வைத்துவிட்டு அரசியல் செய்ய வேண்டாம் என்று எஸ்.ஆர் சேகர் கூறினார்.
கடந்த பத்து வருடங்களாக பா.ஜ.க ஆட்சி தான் நடக்கிறது, அப்படி இருக்கையில் 7 லட்சம் இந்தியர்கள் எதற்காக அமெரிக்காவிற்கு செல்கிறார்கள் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவில் நூற்று நாற்பது கோடி பேர் இருக்கிறார்கள், அன்றாடம் தனக்கு தேவையான உணவு மட்டும் போதும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள், எனக்கு ஒரு வீடு போதும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள், தேவை என்ன என்பதை பொறுத்து அதற்குத் தகுந்த வாழ்க்கையையும் சிலர் நடத்துகிறார்கள், இங்கு இருக்கக்கூடிய தேவைகள் பத்தாதவர்கள் வேறு நாடுகளை நோக்கி செல்கிறார்கள். அவர்கள் ஏன் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்கிறார்கள் என்ற கேள்வியை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நூற்று நாற்பது கோடி இந்தியர்கள் நம்பிக்கையோடு இங்கு இருக்கிறார்கள், ஏழு லட்சம் பேர் வேண்டாம் என்று வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள் என்றால் அவர்களிடம் தான் இந்த கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும் என்று எஸ்.ஆர் சேகர் கூறினார்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டுப்பாடு என்றால் ஒரு செய்தியை எப்படித்தான் வெளியிடுவது என செய்தியாளர் கேட்ட போது பதிலளித்த எஸ்.ஆர் சேகர், ஒரு செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என அவர்களுக்கு மூளை இருக்கிறதல்லவா? சந்தர்ப்பம் பார்த்து நாட்டினுடைய பிரதமரை,அவமானப்படுத்த வேண்டும் என்பதை உள்நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். இதில், தெரியாதது ஒன்றும் இல்லை தெரிந்தே தவறு செய்கிறார்கள். இங்கு இருக்கக்கூடிய அனைத்து கட்சிக்காரர்களையும் பிரதிபலிக்கும் ஒரே ஆள் பிரதமர் தான். அவர் ஜெயிப்பதற்கு முன்னர் ஒரு கட்சி, ஆனால் அவர் ஜெயித்ததற்கு பிறகு பிரதமர். அவர் அனைவருக்கும் சமமானவர்தான். அவரை அவமானப்படுத்துவதை நாங்கள் ஏற்க மாட்டோம், நீங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறோம் என்று கூறினார்.
இணையதளம் முடக்கப்பட்டதற்கு அண்ணாமலை தான் காரணமா என்ற கேள்விக்கு, அண்ணாமலை புகார் கொடுத்தார், மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்தது என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.