BJP MLA Vanathi Srinivasan comments about DMK’s go back Modi issue: பிரதமரை நீங்கள் திரும்பிப்போ என்று கூறினாலும் அந்த திட்டத்தால் ரூ.2000 கோடி முதலீடு தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றும், கோ-பேக் மோடி கோஷத்தை திமுக ஏன் கைவிட்டது என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய வானதி சீனிவாசன், 12-ம் தேதி மதுரை வரும் பிரதமர், அரசு விழாவிற்கு வரவில்லை. பாஜக-வின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மட்டுமே தற்போது முடிவாகியுள்ளது. புதிய திட்டங்கள் அறிவிப்பதாக இருந்தால் முன் கூட்டியே சொல்லிவிட்டு தான் அறிவிப்பார்கள். தற்போது மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பதற்காகத் தான் பிரதமர் வருகிறார் என்று கூறினார்.
அப்போது பிரதமர் அரசு விழாவிற்கு வருவதால் கோ-பேக் மோடி காட்ட முடியாது என்ற திமுகவின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தமிழகத்திற்குரிய திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க வருகிறபோது அதை தமிழகத்தின் சார்பாக அனைவரும் வரவேற்க வேண்டும். கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் வரும்போது கோ-பேக் மோடி என கூறினர். ஆனால், அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று கூறினாலும் கூட அந்த திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது. இதையெல்லாம் அவர்கள் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறோம் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
அடுத்ததாக தமிழகத்தை மத்திய அரசு மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்கிறது என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, எந்தெந்த விதத்தில் மாற்றான் தாய் பிள்ளைகளாக பார்க்கிறது என்று அவர்களை புள்ளிவிவரம் கொடுக்கச் சொல்லுங்கள். அது டிபன்ஸ் காரிடார் ஆக இருக்கட்டும் சாலை வசதிகளாக இருக்கட்டும். தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்திற்காக மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இரண்டு மூன்று திட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலையே உள்ளது. இது மாற்றாந்தாயின் மனப்பான்மையா? மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத இடத்தில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது என்று வானதி சீனிவாசன் கூறினார்.
மேலும், மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் ஜப்பான் பிரதமரை தான் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளது பற்றி கேட்டதற்கு, இதையெல்லாம் நாங்கள் முன்பு சொன்னபோது அவர்கள் காதில் விழவில்லையா. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக நிதி உதவி கிடைத்தால் தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது. இது தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எய்ம்ஸ் கட்டுமான பணியை துவக்கி விட்டார்களா? ஏன் தாமதமாகிறது? 7 மாத காலமாகியும் ஒற்றை செங்கலை கையில் வைத்து ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் அரசியலுக்காக ஒற்றை செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறது என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”