/indian-express-tamil/media/media_files/2025/09/17/bl-santhosh-form-5-teams-2025-09-17-07-43-58.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. Photograph: (Facebook/BJP4TamilNadu)
பா.ஜ.க மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள், பல்வேறு கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்வது தொடர்பாக பி.எல். சந்தோஷ், புதியதாக 5 தேர்தல் பணிக் குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அரசியல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களுடைய பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அண்ணாமலை, ஹெச். ராஜா, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக 5 தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து பி.எல். சந்தோஷ் உத்தரவிட்டார்.
இந்த குழுக்களில் தமிழக பா.ஜ.க-வின் 5 முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஹெச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க-வின் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி விளம்பரங்கள், சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்வது தொடர்பான குழுவுக்கு ஹெச்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல, முக்கிய பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்களை சந்தித்து நட்பை ஏற்படுத்தி, பா.ஜ.க-வுக்கு ஆதரவை வலுப்படுத்த தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசியலில் நடப்பு சூழல் பற்றிய விவரங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அண்ணாமலை தலைமையில் ஒரு குழு அமைத்து செயல்பட பி.எல். சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள் மேம்பாடு, பட்டியலின சிறுமிகள் கல்வி முன்னேற்றம் தொடர்பாக குழு அமைக்க வானதி சீனிவாசனுக்கு பி.எல். சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த குழுக்கள் தங்கள் நடவடிக்கையை மாதம் ஒருமுறை கட்சியின் தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என பி.எல். சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து பொறுப்பாளர்களையும் கண்காணித்து, தேர்தல் பணியை முழுவீச்சில் செயல்படுத்த நயினார் நாகேந்திரனுக்கு பி.எல். சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us