/indian-express-tamil/media/media_files/2025/05/03/1JRjL9y3zIJXKWeXS33O.jpg)
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று (மே 3) சென்னை வந்தடைந்தார். அவருக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று காலை சுமார் 10:30 மணியளவில் காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 6-வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். அதன்படி, சென்னை விமான நிலையம் வந்த அவரை பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முக்கிய நிர்வாகிகளான தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிலையில், சைவ சித்தாந்த மாநாட்டிற்கு பின்னர் வேலூரில் அமைந்துள்ள தங்க கோயிலுக்கு சென்று ஜே.பி. நட்டா சாமி தரிசனம் செய்கிறார். மேலும், தமிழ்நாட்டில் பா.ஜ.க பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்றுவது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்துகிறார்.
முன்னதாக, கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை தந்தார். அப்போது, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க அங்கம் வகிக்கும் என்றும், இதே கூட்டணி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த மாதம் பா.ஜ.க மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில் அமித்ஷா வருகை தந்த ஒரு மாதத்திற்குள் பா.ஜ.க தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவும் சென்னைக்கு வருகை தந்திருப்பது, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த வகையில், சில முக்கியமான முடிவுகள் இந்த நிகழ்வின் போது எடுக்கப்படலாம் என்றும், அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.