பா.ஜ.க மாநில ஐ.டி. விங் தலைவர் கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பா.ஜ.க ஐடி விங் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் உலாவரும் போலி கடிதம் குறித்து பா.ஜ.க போலீசில் புகார் அளித்துள்ளது.
பா.ஜ.க மாநில ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ஐ.டி.விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் பா.ஜ.க அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
இந்நிலையில், பா.ஜ.க மாநில ஐ.டி. விங் தலைவர் பதவி மற்றும் செயலாளர் பதவி காலியானதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பா.ஜ.க மாநில ஐ.டி. விங் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை பெயரில் ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் உலா வந்தது. இந்த கடிதத்தை சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கடிதத்தில், “தமிழக பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் மாநிலத் தலைமையின் அன்பு வேண்டுகோள், கடந்த சில தினங்களாக தமிழக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மன வேதனையை ஏற்படுத்துகின்றன. நான் எங்கோ ஓர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். பாஜகதான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது. எனக்கு கட்சியின் கொள்கைகளோ கோட்பாடுகளோ தெரியாது. அதை தெரிந்து கொள்ள நேரமோ அவசியமோ எனக்கு இல்லை என்றே கருதுகிறேன். எனது தலைமையை வெறுத்து, கட்சியில் இருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாராளமாக வெளியேறி கொள்ளுங்கள், ஏற்கெனவே வெளியேறிவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டிய நிபந்தத்தில் கட்சி உள்ளது. அதனடிப்படிஅயில், தமிழக பாஜக ஐடி விங் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக பிரதீப் (வாயிஸ் ஆஃப் சவுக்கு சங்கர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் வெளியான இந்த அறிக்கை போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை அது போல எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பா.ஜ.க ஐ.டி. விங் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதாக பா.ஜ.க அண்ணாமலை பெயரில் வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் அறிக்கை முற்றிலும் போலியானது என்றும் திட்டமிட்டே சில விஷமிகள் இதுபோன்று பரப்பி வருவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"