/tamil-ie/media/media_files/uploads/2023/09/tamil-indian-express-2023-09-03T171541.767.jpg)
பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்துள்ள நிலையில், அவருக்கு, பா.ஜ.க கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் திருவிழா கலைகட்டி வருகிறது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மூன்று அணிகள் மோதுகின்றனர். மேலும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது. தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி என்பதைவிட நான்குமுனைப் போட்டியாக அமைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.க, தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுடன் 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. அதன்படி, பா.ஜ.க 20 தொகுதிகள், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள், ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா-வுக்கு 3 தொகுதிகள், டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வுக்கு 3 தொகுதிகள், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி (ஐ.ஜே.கே), ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் (த.ம.மு.க), தேவநாதன் தலைமையிலான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (இ.ம.க.மு.க) ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதி ஓ.பி.எஸ் தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசும்பொது, மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க 20 இடங்களில் போட்டியிடுகிறது. 4 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன என்று கூறினார்.
ஓ.பி.எஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஓ.பி.எஸ் எப்போது வேண்டுமானாலும் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, அது தொடர்பாகவும் நான் கூறுவது சரியாக இருக்காது. முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.