பாரத பிரதமர் மோடி தமிழகம் முழுவதும் முன்னிட்டு பாஜக மாநில தலைவர்கள் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.
அந்த வகையில் திருச்சி வந்த பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்றார். பின்னர், திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது: “பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகிறார். அப்போது, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து 4,500 கோடி ரூபாய்க்கு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி மறுநாள் திருச்சி வந்து தங்குகிறார். பின்னர், ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திரசோழன் திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்று கலை, கலாச்சார விழாவில் கலந்து கொள்கிறார்.
உங்களுடன் ஸ்டாலின் என்பதை நான் எதிர்க்கிறேன் அரசு செலவில் இவர்களது கட்சி வேலையை நடத்துகிறார்கள். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொள்கை பரப்புச் செயலாளர்களாக நியமித்துள்ளார்கள். எப்படி இதை ஒத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. வேறு யாராவது இருந்திருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றிருப்பார்கள்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நன்றாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே .எஸ். அழகிரி கூறியது குறித்த கேள்விக்கு, ”இரண்டு நாட்களுக்கு முன்பு திருவள்ளுவர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. லாக்கப் டெத் நடக்கிறது. ஏழு பவுன் நகைக்காக வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 24 மணி நேரத்தில் 10 கொலைகள் நடைபெற்று உள்ளது. யாருக்காக சொல்கிறார் கே.எஸ்.அழகிரி. இதெல்லாம் அவர் வீட்டில் நடந்தால் அவருக்கு தெரியும்.
முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “தமிழக முதலமைச்சர் எனக்கு நெருங்கிய நண்பர். எனது தொகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை செய்து கொடுத்துள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டுகிறேன். மருத்துவமனையில் இருந்து கோப்புகளை பார்க்கிறார் என்றால் அதனை வரவேற்கிறேன்.
குர்ஆன் மீது ஆணையாக பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என ஆதவ் அர்ஜுனாவின் கருத்து குறித்த கேள்விக்கு, “அது அவருடைய தனிப்பட்ட கருத்து. குர்ஆன், பகவத்கீதை போன்ற புனித நூல்களை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்