scorecardresearch

அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பா.ஜ.க ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ராஜினாமா

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அக்கட்சியின் மாநில ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

CTR Nirmal Kumar, BJP, Annamalai, சிடிஆர் நிர்மல் குமார், பாஜக, அண்ணாமலை, தமிழ்நாடு
சி.டி.ஆர். நிர்மல் குமார்/

சொந்த கட்சியினரையே வேவு பார்ப்பதாகவும் திரைமறைவில் பேரம் பேசுகிறார் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அக்கட்சியின் மாநில ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன். உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம். விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டு கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பா.ஜ.க-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “பா.ஜ.க சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்,

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பா.ஜ-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்பும் இல்லாமல் உண்மையாக நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்தவரை பணியாற்றினேன். இன்று விடைபெறுகிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையைப் பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான் தோன்றி தனம் இவற்றுடன் ‘மனநலம் குன்றிய’ மனிதரைப் போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019-ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப் பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாகப் பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சரகளையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பா.ஜ.க-விற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?” என்று பா.ஜ.க-வில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp state it wing president ctr nirmal kumar resigns and allegations against annamalai

Best of Express