தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் ஆணையத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில அமைச்சர் இருந்த மேடையில், தி.மு.க நிர்வாகி சாதிக் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தபோது, அவருடைய பேச்சைத் தடுக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பெண்களை குறிப்பாக பா.ஜ.க உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தி.மு.க நிர்வாகி மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க சனிக்கிழமை கூறியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கவனத்தை ஈர்த்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க பேச்சாளரான சைதை சாதிக், பா.ஜ.க நிர்வாகிகளான குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோரை இழிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தி.மு.க நிர்வாகி சாதிக் பேசியபோது, மாநில அமைச்சர் ஒருவர் மேடையில் இருந்ததாகவும், அவர் சாதிக்கின் தவறான பேச்சைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
“நம் நாட்டில் உள்ள பெண்கள் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அவர்களின் லட்சியங்களை இழக்க முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். தி.மு.க.வும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும் இந்த நடத்தையை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், சாதிக் மீதான நடவடிக்கை, பெண்களை இழிவுபடுத்தி அதிலிருந்து தப்பிக்க முடியும் என்று நம்புபவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும்” என்று அண்ணாமலை அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பா.ஜ.க மகளிரணித் தலைவர்களைப் பற்றி தவறாகப் பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளதோடு, மன்னிப்பு கேட்கவும் மறுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக மூன்றாம் தர ஆபாச அரசியலுக்கு எதிராக நமது பெண் தலைவர்களும், தொண்டர்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
பா.ஜ.க மகளிர் தொண்டர்கள் காவல்துறையில் புகார் செய்ய விரும்புவதாகவும், உள்ளூர் காவல்துறை அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததால், இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி பா.ஜ.க சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க பெண் தலைவர்களுக்கு எதிராக தி.மு.க நிர்வாகியின் கருத்துக்கு குஷ்பூ சுந்தர் இடம் தி.மு.க மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி மன்னிப்பு கேட்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"