கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பேருந்து நிழற்குடையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், "கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், நிலம் முழுவதும் காலி செய்யப்பட்டு வழங்கப்படவில்லை. இதனால் பணிகளை தொடங்குவதில் மத்திய அரசுக்கு சுணக்கம் இருப்பதாய் தகவல் வந்திருக்கிறது. எனவே நிலம் முழுவதும் முழுமையாக காலி செய்யப்பட்டு ஒப்படைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை வரவிருக்கும் முதல்வரிடம் கேட்க உள்ளேன்.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை மாநில அரசு உடனடியாக விரைந்து அனுப்ப வேண்டும் என முதல்வரிடம் கேட்க இருக்கிறேன்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் த.வெ.க தலைவர் விஜய் மீது வைத்துள்ள விமர்சனம் குறித்து, இன்னொரு தலைவர் விமர்சனத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பா.ஜ.க-வின் லட்சியம் என்றும் உணவு சார்ந்து மொழி சார்ந்து பா.ஜ.க மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. கடந்த முறை கோவை வந்த முதல்வரிடம் கோவையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்திருந்தேன். அதில் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் புதிய கோரிக்கைகள் இருக்கிறது. அவற்றை முதல்வரிடம் நேரில் ஒப்படைக்க உள்ளேன்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு விஜயின் எதிர்ப்பு குறித்து, ஒரே நாடு ஒரே தேர்தலில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை அரசியல் கட்சி யோசிக்க வேண்டும். வெறுமனே அனைவரும் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்க கூடாது.
கோயம்புத்தூரில் சாலைகள் சரியாக இல்லை. முதலமைச்சரின் வருகைக்காக கோயம்புத்தூரில் ரோடு போடுகிறார்கள் என்றால் அடிக்கடி முதல்வர் கோவை வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன்.
பிராமண சமுதாயத்திற்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. சமுதாயம் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிராமணர்களின் கோரிக்கை நியாயமானது/
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தேசப்பற்றும் மிக்க திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்த படத்தை கமலஹாசன் தயாரித்து ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி. அமரன் திரைப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“